கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நாளை வரை நீடிப்பு!

HH
Sifnas Hamy
Report


கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நாளை நண்பகல் 12 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. 

 அதன்படி, கண்டி மாவட்டத்தின் உடுதும்பர பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், நுவரெலியா மாவட்டத்தின் நில்தண்டாஹின்ன மற்றும் வலப்பனை பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இந்த மண்சரிவு எச்சரிக்கை அமுலில் உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. 

 இதே நேரத்தில், தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த 24 மணித்தியாலத்திற்குள் ஆழமான காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மேலும் உருவாக அதிக வாய்ப்பு இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

 இதன் காரணமாக, வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் நாளை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.